வாங்க ....வாங்க ......!!!!!

நம்ம ஊர்ல நடக்ற சில நல்ல விஷயங்களயும் மற்ற சில விஷயங்களையும் உங்களோட பகிர்ந்துக்க ஒரு சிறிய முயற்சி......
picture widgets

Thursday

தேனின் மருத்துவ குணங்கள்

தேனும் ஒரு மருந்துதான்

தேன் குடித்த நரியைப் போல என்று சொல்லுவார்கள். அர்த்தம் என்ன?.

மிகச் சந்தேசம் அடைவது என்பதுதானே.. இந்தக் கட்டுரையைப் படித்ததும் உங்களில் சிலராவது தேன் குடித்த நரியைப் போல சந்தோசம் அடையக் கூடும்.


சரி. புண்களைக் குணப்படுத்த எவ்வளவு தேன் இடவேண்டும். மெல்லிய படையாக இட்டால் போதும் என இரு மருத்துவ அறிக்கைகள் கூறின. ஆயினும் ஏனைய பல மருத்துவ அறிக்கைகள தாராளமாகத் தேன் இடுவது பற்றியும் இன்னும் சில புண்களின்மேல் தேனை ஊற்றியதாகவும் கூறின.

இயற்கை மருத்துவம்

அதுவும் முக்கியமாக பாரம்பரிய வாழ்க்கை முறைகளிலும், இயற்கையோடு இணைந்த உணவுகளோடும், சுதேச வைத்திய முறைகளிலும் பிரியம் உள்ளவர்களுக்கு நிச்சயம் மகிழ்வு உண்டாக்கும் விடயம் இது.


விடயம் இனிப்பானது, மிக இனிப்பான தேன் பற்றியது. தேன் போசாக்குள்ள பதார்த்தம். அது எமது பாரம்பரிய வைத்திய முறைகளில் பயன்படுத்தப்படுகிறது என்பது உங்களுக்குத் தெரியும். வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்லது என நம்புகிறோம்.


ஆனால் இவை எல்லாம் வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. அதற்கு மேலாக ஏதாவது ஆராய்சிகளால் நிறுவப்பட்ட, விஞ்ஞானபூர்வமான மருத்துவ குணங்கள் தேனுக்கு உள்ளதா?

விஞ்ஞான பூர்வ தகவல்கள்

காயங்களுக்கும், சீழ்ப் பிடித்த புண்களுக்கும் ஏற்ற சிறப்பான மருந்து இதுவென ஆய்வுகள் கூறுகின்றன.


தேன் புண்களின் வலியைக் குறைக்கிறது.


ஆறுதல் அளிக்கும் உணர்வைக் கொடுக்கின்றன.


புண்களில் உள்ள சீழ், அழுக்குச் சவ்வு போன்றவை விரைவில் கரைந்து புதிய ஆராக்கியமான திசுக்கள் உருவாக உதவுகின்றன.


புண் குணமாகியதும் விரைவில் ஆராக்கியமான தோல் மேவி வளர்வதற்கு உதவுகின்றன. இவைதான் மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளாகும்.


புண்கள் விரைவில் குணமாக இவற்றை விட வேறென்ன தேவை?


தேன் எவ்வாறு குணமாக்குகிறது

புண்ணைக் குணமாக்குவதற்கு தேனில் என்ன இருக்கிறது என்று கேட்கிறீர்களா?

1. தேனில் உள்ள கூடியளவு சீனியின் அதிக செறிவும், குறைந்த ஈரலிப்புத் தன்மையும் கிருமிகளை அண்டவிடாது தடுக்கின்றன.


2. இத்துடன் தேனில் உள்ள குளுக்கோனிக் அமிலத்தால் (Gluconic acid) உண்டாகும் அமில ஊடகமும், அதிலுள்ள ஐதரசன் பெரோக்ஸைடும் இணைந்து சீழ்ப் பிடிக்க வைக்கும் கிருமிகள் பெருகுவதைத் தடுக்கின்றன என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.


கிருமி தொற்றிச் சீழ்ப்பிடித்த புண்களுக்கு தேன் இட்டு சிகிச்சை செய்தபோது அதிலுள்ள கிருமிகள் 3முதல்10 நாட்களுக்குள் முற்றாக அழிந்து கிருமிப்பற்றற்ற புண்களாக மாறியதாக மூன்று ஆய்வுகளின் முடிவுகள் சொல்கின்றன.


3. அத்துடன் புண்ணிலுள்ள வீக்கத்தைத் தணிக்கும் ஆற்றலும் தேனுக்கு உள்ளது.

புண்ணைக் குணமாக்க எவ்வளவு தேன் தேவை

எனவே எவ்வளவு தேன் இடவேண்டும் என்பது பற்றி தெளிவான, கருத்தொருமைப்பாடு இல்லை என்பது தெளிவாகிறது. புண் மேல் இடும் தேனின் அளவு உலர்ந்து போகாத அளவிற்கு இருந்தால் போதும் என்பது அறிவு பூர்வமான கருத்தாகும்.

தேனினால் சுத்தமும் செய்யலாம்

பொதுவாக மருந்து கட்டும்போது சேலைனினால் சுத்தம் செய்த பின்பு தேனை இட்டுக் கட்டுவார்கள். மாறாக தேனைக் கொண்டே சுத்தம் செய்த பின் அதனையே இட்டு மருந்து கட்டலாம்.

நெருப்புச் சுட்ட புண்கள்

நெருப்புச் சுட்ட புண்களுக்கும் தேன் மிகவும் சிறந்ததாகும். நெருப்பு, சுடுநீர், கொதி எண்ணெய் போன்றவற்றால் ஏற்டும் சூட்டுக் காயங்களுக்கு உடனடியாகத் தேன் இட்டால் வேதனை தணியும். காயமும் விரைவில் குணமாகும்.

வாய்ப் புண்கள்

வாய்ப் புண்களையும், முரசு கரைதலையும் தேன் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது. நியுசீலந்தில் வளரும் மனுக்கா (Manuka plant) என்ற தாவரத்தில் இருந்து பெற்ற தேனைக் கொண்டு செய்யப்பட்ட ஒருவகை இனிப்பண்டம் வாய்ப்புண்களையும் முரசு கரைதலையும் மாற்றுகிறது என சில ஆய்வுகள் கூறுகின்றன.

20ம் நூற்றாண்டின ஆரம்பத்தில் (1940 களில்) நுண்ணுயிர் கொல்லி (Antibiotics) கண்டு பிடிக்கப்பட்டிரா விட்டால் இன்று புண், காயம், மற்றும் சத்திர சிகிச்சை தேவைகளுக்கான முக்கிய பொருளாக வளர்ந்திருக்கும் என்பது திண்ணம்.

பிள்ளைகள் மருந்து கட்டுவதென்றால் அலறியடித்து ஓடுவது வழக்கம். முதலில் வாயில் சற்று தேனை ஊட்டிவிட்டு, தேனால் சுத்தம் செய்து தேன் இட்டு மருந்து கட்டுவதென்றால் தாங்களாகவே ஓடி வருவார்கள் என்பது திண்ணம்.

தேனின் சிறப்பு அம்சங்கள் என்ன?

சுத்தமான தேன் என்றுமே பழுதடையாது. பிரிட்ஸில் வைத்துப் பாதுகாக்க வேண்டிய தேவை எதுவும் இல்லை.


மனிதனுக்கு தெரிந்த மிகப் பழமையான உணவு வகைகளில் இதுவும் ஒன்று. ரட் மன்னரின் (King Tut) கல்லறையில் இருந்து கண்டெடுக்கப்பட்ட புராதன காலத் தேனானது, இன்றும் உண்ணக் கூடிய நிலையில் சற்றும் பழுதடையாது இருந்தது குறிப்பிடத்தக்கது.


தேனில் உள்ள .இனிப்பின் பெரும்பகுதி பழங்களில் இருந்து கிடைக்கும் புரக்டோஸ் (Fructose) வகையைச் சார்ந்தது. இதனால்; நாம் வழமையாகப் பாவிக்கும் சீனியை விட 25 சதவிகிதம் இனிப்புக் கொண்டது.

தேனின் போஷனை


ஒரு தேக்கரண்டி தேனில் 64 கலோரிச் சத்து உண்டு. இது எமது உடற்தசைகளின் இயக்கத்திற்கான சக்தியை வழங்குகிறது. தேனில் 17.1 சதவிகித நீர்ப்பற்றே உண்டு. மிகுதி 82.4 சதவிகிதமும் மாச்சத்தாகும். இந்த மாச்சத்துத்தான் இனிப்பாக எமக்குக் கிடைக்கிறது.



மிச்சமுள்ள 0.5 சதவிகிதம் மட்டுமே புரதம், விட்டமின்கள் மற்றும் தாதுச்சத்தாகும்.


கொழுப்புச்சத்து, கொலஸடரோல் ஆகியன அடியோடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த மாப்பொருளில் பழவகை இனிப்பான புரக்டோஸ் 38.5 சதவிகிதமாகும் ((fructose 38.5%). குளுக்கோஸ் 31 சதவிகிதமாகும். மிகுதி 12.9 சதவிகிதம் மோல்டோஸ், சுகுரோஸ் போன்ற ஏனைய சீனிவகைகளாகும். இதனால் விரைவில் ஜீரணமடையும் தன்மை கொண்டது.

பக்கவிளைவுகள்

தேன் பொதுவாகப் பக்க விளைவுகள் அற்ற பொருளாகும். தேனுக்கு ஒவ்வாமை (Allergy) ஏற்படுவது அரிது. அதில் உள்ள பூக்களின் மகரந்தங்களுக்கும், தேனீ பூச்சியின் புரதங்களுக்கும் ஒவ்வாமை ஏற்படாலாம் என எதிர்பார்த்தாலும் அவ்வாறு ஏற்பட்டதான மருத்துவ அறிக்கைகளைக் காண முடியவில்லை.

ஆதாரமற்ற நம்பிக்கை

“தேனுடன் தண்ணீர் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் உடல் மெலியுமாமே” என ஒரு நோயாளி என்னிடம் கேட்டார். இது பற்றி மருத்துவ இணைய தளங்களில் தேடியபோது அதற்கான ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை.


ஆனால் தேனில் 82.4 சதவிகிதமும் மாச்சத்துள்ளது என்ற தகவலை வைத்து விஞ்ஞான பூர்வமாகவும், தர்க்க ரீதியாகும் சிந்தித்தால் இதில் எந்தவித உண்மையும் இருக்க முடியாது என்பது தெளிவாகிறது. வெற்று நம்பிக்கைளை ஆதாரமாகக் கொண்டு மருத்தவ விடயங்களில் தீர்மானிக்கக் கூடாது என்பதற்கு இது ஒரு ஆதாரம்.
 



No comments:

Post a Comment

நான் சொன்னத பத்தி நீங்க என்ன நினைகிறீங்க ......
கொஞ்சம் சொல்லுங்களேன்....